Saturday, September 27, 2014



"என்னடா சட்டம் பேசுறே. உன் மனசுக்குள்ளே என்ன பெரிய புடிங்கின்னு நெனைப்பா?" என்று கேட்டபடியே சாமிநாதனை நெருங்கினான் சிவராவ்.

சாமிநாதன் அசரவில்லை.

"செல்வத்துக்கு ஒட்டுப்போடுங்கன்னு கேளு.  அதுக்கு ரைட் இருக்கு.  பட் ஆனால் பாலட்
பேப்பர்ஸை நீங்களே வச்சுக்கிட்டு எங்களை கம்பெல் பண்ணுவேன்னு சொல்லறியே. 
அது சரி இல்லே.  அதை நான் அக்செப்ட் பண்ண மாட்டேன்." அழுத்தமாக தன்னுடைய
எதிர்ப்பை பதிவு செய்தான் சாமிநாதன்.

"இந்தக் க்ளாஸ்லே இத்தனை பேரு இருக்காங்க.  துள்ளறே.  மனசுக்குள்ளே பெரிய லார்டுன்னு நெனைப்பா.?" முகம் சிவக்க பேசினான் சிவராவ்.

அவனுக்கு ஏதோ பதில் சொல்ல முனைந்தான் சாமிநாதன்.

அதற்குள் ஏதாவது ரசாபாசமாக ஆகிவிடப்போகிறதே என்று எண்ணிய நான், "டேய். சாமா. 
ப்ளீஸ். பேசாம இரேன்.  உனக்கென்ன வந்தது?  எதற்கு இவன் கூட வம்பு?" என்று
அவன் சட்டையை பிடித்து இழுத்து உட்கார வைத்தேன் நான்.

"தோடா..    பாரு.  உன் பொண்டாட்டி சொல்லறா பாரு. அதை கேட்டுகிட்டு கம்முன்னு அடங்கு." என்றான் சிவராவ் கேலியாக.

அனைவரும் கொல்லென்று சிரித்தனர்.

அப்பொழுதுதான் எனக்கு புரிந்தது.  வகுப்பு முழுவதும் எங்கள் நெருக்கமான நட்பும்,
பழக்கமும் எப்படிப் பேசப்பட்டு வந்திருக்கிறது என்று.

கூச்சமும் அவமானமும் என்னை ஆக்கிரமித்தது.

"இதோ பாரு சிவா.  திஸ் இஸ் தி லிமிட்.  இவன் சொன்னதுலே என்ன தப்பு?  நீ ரொம்ப அடமன்ட்டா பிஹேவ் பண்ணிட்டு இருக்கே.  உங்க ரெண்டு பேரு பிரச்சனையிலே என்னை ஏன் இழுக்கறே?" என்றேன் நான்.

நான் பேச ஆரம்பித்ததும், "ரமணி.  நீ பேசாம இரு.  நான் பாத்துக்கறேன்." என்று குறுக்கிட்டான் சாமிநாதன்.

"என்னடா பாத்துக்குவே.  பாருடா.  நல்லா பாரு.  சட்டைய கழட்டி காட்டட்டுமா? 
இல்லே.. பாண்ட் ஜிப்பை அவுத்துக் காட்டட்டுமா?" என்றான் சிவராவ்
கோபத்துடன்.

"வேணாம் சிவா.  பேச்சு நல்லா இல்லே." என்று எச்சரித்தான் சாமிநாதன்.

மறுகணம் யாரும் எதிர்பார்க்காமல் திடீரென்று சாமிநாதனின் சட்டையை கொத்தாக பற்றி, "வெளியே வாடா." என்று இழுத்தான் சிவராவ்.

சட்டையை பிடித்த அவன் கையை விளக்கி அவனை தள்ளிவிட்டான் சாமிநாதன்.  அதே
சமயம் இதுவரை நடந்தவற்றை கவனித்துக்கொண்டிருந்த சிவராவுடன் வந்த மூன்றாம்
ஆண்டு மாணவன் சம்பத்,"ஹேய். யு. கம் அவுட்.  வெளியே வா." என்று சாமிநாதனை
இழுத்தவன், பெஞ்ச்சில் முன்னால் இருந்த என்னை விலக்கி அவனை வெளியே
வரவைத்தான். 

எனக்கு உடம்பு நடுங்க  ஆரம்பித்தது.  இன்று எதோ நடக்கப் போகிறது.  அது நல்லதற்கல்ல என்று உள்ளுணர்வு சொல்லியது.

என்னை நகர்த்திவிட்டு வெளியே சாமிநாதன் வந்ததும், தன்னை தள்ளிவிட்டதால் ஆத்திரமடைந்த சிவராவ் அவனை அடிக்க பாய்ந்தான்.

அவனை தடுத்து நிறுத்திய சம்பத் சாமிநாதனை பார்த்து, "இதோ பாரு. 
செல்வம் ஹாஸ் டு வின்.  அது தான் நமக்கு வேணும்.  நாம எல்லாரும் ஒத்துமையா
சேந்து அப்படியே ஒட்டுப்போடணும் என்றால் பாலத் பேப்பெர்ஸ்   எங்க
கண்ட்ட்ரொல்லே வரதை தவிர வேற வழி இல்லே.  புரிஞ்சதா?" என்றான் நிதானமாக -
அதே சமயம் அழுத்தமாக.  

"அதைத்தான் நான் தப்புன்னு சொல்லறேன். ஐ வோன்ட் அக்செப்ட் திஸ்." என்றான் சாமிநாதன். .

"பாரு.நீ எவ்வளவு தன்மையா பேசறே.  இவன் என்னடான்னா மறுபடி மறுபடி அதையே
சொல்லிட்டு இருக்கானே." - என்று ஆவேசத்துடன் சிவராவ் சாமிநாதனை
நெருங்கியபொழுது..

அந்தச் சம்பவம் நடந்தது.

சட்டென்று உடல் சிலிர்த்து நடுங்க கீழே விழுந்தான் சாமிநாதன்.  வாயில் நுரை தள்ளியது.  கையும் காலும் வெட்டி இழுக்க ஆரம்பித்தன.  வலிப்பு வந்து தரையில் போட்ட மீனாகத் துடிக்க
ஆரம்பித்தான் சாமிநாதன்.

பதரிப்போனவனாக அவனை நெருங்கி அவன் தலையை எடுத்து என் மடிமீது வைத்துக்கொண்டேன் நான்.

அவ்வளவுதான் அதுவரை அங்கு இருந்த சூழலே மாறிவிட்டது.

சட்டென்று யாரோ ஒரு சக மாணவன் தனது வண்டிச் சாவியை கொடுக்க அதை அவன் கையில் வைத்து அழுத்தமாக திணித்து பற்றிக்கொண்டேன் நான்.

சமயோசிதமாக செயல்பட்டான் சிவராவ்.  அனைவரையும் விலகச்செய்து காற்றுவரும்படி செய்தான் அவன்.

சட்டென்று அவனது குழுவைச்சேர்ந்த ரமேஷை அழைத்து கையில் பணத்தைக் கொடுத்து காண்டீன்லே இருந்து குளிர்பானம் ஒன்றை வாங்கி வரும்படி அனுப்பிவைத்தான் அவன்.

சிறிது நேரத்தில் மெல்ல மெல்ல அடங்கி தன்னிலைக்கு வந்தான் சாமிநாதன்.

பரபரப்பை கேள்விப்பட்டு அங்கு வந்த துறைத்தலைவர் நடந்த சம்பவம் பற்றி கேட்க
"சாமிநாதனுக்கு பிட்ஸ் வந்துடுச்சு சார்." என்று மட்டும் அனைவரும் கோரசாக
சொன்னார்கள்.

குளிர்பானம் காண்டீனில் இருந்து வந்ததும் அதை என் கையில் கொடுத்து,
"ரமணி.. இதை மெல்ல மெல்ல குடிக்க வை.  மெதுவா.. சாமிநாதா.  முதல்லே இதை
குடி. " என்று அவனே ஒரு கையால் பற்றிக்கொண்டு அதை சாமிநாதனுக்கு
கொடுத்தான்.

இப்படி நடந்து கொள்ள ஒரு மாணவனால் மட்டுமே முடியும். 

சக மாணவனுடன் என்னதான் கருத்துவேற்றுமை இருந்தாலும் அவனுக்கு ஒரு துன்பம்
என்றால் வேற்றுமையை புறம்தள்ளிவிட்டு நட்பை மட்டுமே காட்ட மாணவனால் மட்டுமே
முடியும்.

சட்டென்று என் மதிப்பில் ஒரு கணம் சிவராவ் உயர்ந்து நின்றான்.

(முரட்டுத்தனம் தொடரும்..)

No comments:

Post a Comment