Saturday, September 27, 2014

28.  வளர்ந்தாலும் நான் இன்னும் சிறுபிள்ளை தான்.
நான் அறிந்தாலும் அதுகூட நீ சொல்லித்தான்.  
-கவிஞர் வாலி.

நாட்கள் கரைந்துகொண்டிருந்தன.  

ராபர்ட் அன்று தன காதலை வெளிப்படுத்திக் கலந்தாலும் அதன் பிறகு மீண்டும்  பழைய மாதிரியே தனது ஆணாதிக்கத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தான்.

அவனது ஆளுமையினால் சமயங்களில் நான் காயப்பட்ட பொழுதெல்லாம் ஆறுதலாக எனக்கு ஆதரவாக இருந்தான் பிரகாஷ்.

எனக்கு ராபர்ட்டின் ஆளுமையும் பிடித்திருந்தது.  அது தேவையாகவும் இருந்தது.  அதே சமயம் பிரகாஷின் அரவணைப்பும் வேண்டி இருந்தது.

இதற்கிடையில் வகுப்பில் கணேசனும் சாமிநாதனும் எனக்கு நண்பர்களாக -  அதிலும் சாமிநாதன் சற்று நெருக்கம் அதிகமான நண்பனாக பழக ஆரம்பித்தான்.  

நாங்கள் மூவரும் சேர்ந்து வகுப்பை கட் அடித்து சினிமாவுக்கு செல்லும் அளவுக்கு வந்துவிட்டோம்.

எங்களில் யாராவது ஒருவரை லெக்சரர் வகுப்பை விட்டு வெளியேற்றினார் என்றால் உடனே அடுத்த இருவரும் சேர்ந்து வெளியேறிவிடுவோம்.

அன்று கணேசன் வரவில்லை.   எனக்கும் சாமிநாதனுக்கும் வகுப்பில் இருக்க பிடிக்கவில்லை.

மதியம் இருவருமே ஒன்று சேர்ந்து வெளியேறிவிட்டோம்.  

"ரமணி.  என் வீட்டுக்கு வாயேன்.  என் மதர் கிட்டே உன்னைப் பற்றி நெறைய சொல்லி இருக்கேன்.  அவங்க உன்னை பாக்கணும் என்று சொல்லிகிட்டே இருக்காங்க.  " என்றான் சாமிநாதன்.

"என்னடா இது?  உங்க மதர் கிட்டே என்னை பற்றி என்ன சொல்லிவச்சு இருக்கே.  தப்பு தப்பா எதாச்சும் சொல்லி இருக்கியா?  என் பேரு டாமேஜ் ஆயிடப் போறது." என்றேன் நான்.

"ஆமா.  இவரு பெரிய புடுங்கி.  உன்  பெயர நான் வேலைமெனக்கெட்டு டாமேஜ் பண்ணறதுக்கு,. இப்போ வீட்டுக்கு வாடா. " - என்று அழைத்தான் சாமிநாதன் .

"ஓகேடா.  வரேன்.  உன் வீட்டுலே யாரெல்லாம் இருக்காங்க. அதை சொல்லு. தெரிஞ்சுக்கறேன்." என்றேன் நான்.

இருவரும் பேசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தோம்.

"நான். எங்க அம்மா.  நான் ஒரே பையன்தான்.  ரெண்டு பேரும் எங்க மாமாவோட ஆதரவுலே இருக்கோம்." - என்றான் அவன்.

"அப்படீன்னா.  உங்க அப்பா?  அவர் இல்லையா?" என்று கேட்டேன் நான்.

"அந்த ஆளைப் பத்தி பேசவே பேசாதேடா.  அவன் ஒரு  மனுசனே இல்லே.  எங்க அம்மா நான் சின்னக் குழந்தையா இருக்கறப்போவே அவன் அம்மாவை டிவோர்ஸ் பண்ணிட்டாண்டா.  அப்போதுலே இருந்து எங்களுக்கு என் மாமா தான் எல்லாம். " என்றான் சாமிநாதன்.

.எனக்கு என்னவோ போல இருந்தது.  பாவம்.  தந்தையின் அன்பை அறியாதவன் என்ற எண்ணம் தோன்றியதும் அவன் மீது எனக்கு இன்னும் நெருக்கமான சினேக உணர்வு ஏற்பட்டது.

12-B பேருந்தில்  பயணித்து கோடம்பாக்கம் FLY -OVER  நிறுத்தத்தில் இறங்கி மகாலிங்கபுரம் ரோட்டில் நடந்து ஐயப்பன் கோவிலுக்கு இரண்டு தெரு தள்ளி இருந்த வீதியில் இடது புறம் திரும்பி நடந்து அவன் வீட்டை அடைந்தோம்.

காலிங் பெல்லை அழுத்தினான் சாமிநாதன்.  நடுத்தர வயதில் இருந்த அவனது அம்மா கதவைத் திறந்தார்.

"வாங்க." என்று இருவரையும் வரவேற்றார் அவர்.

வீட்டுக்குள் நுழைந்ததும்."அம்மா. இவன் தான் ரமணி.  " என்று என்னை அறிமுகம் செய்துவைத்தான் அவன்.

சட்டென்று குனிந்து அவரது காலைத் தொட்டு ஒரு வணக்கம் வைத்தேன் நான்.

"நல்லா
இருப்பா." என்று ஆசி கூறியவர். "வீட்டுக்கு வந்தா உன்னைப் பத்தித்தான் வாய்
ஓயாம பேசிண்டே இருப்பான்.  உனக்கு கர்நாடிக் மியூசிக் ரொம்ப
பிடிக்குமாமே.  ஜேசுதாஸ் பாட்டு என்றால் உனக்கு உயிராமே.  அதை எல்லாம்
சொல்லிட்டே இருப்பான்.  யாரை பத்தியும் இப்படி எல்லாம் அவன் என் கிட்டே
பேசினதே கிடையாது.   எனக்கே ஆச்சரியமா இருக்கும்.  இந்த அளவுக்கு எந்த
பிரெண்ட்ஸ் கிட்டேயும் அவனுக்கு அட்டாச்மென்ட் இருந்ததே இல்லை.  எப்படியோ
உங்க பிரெண்ட்ஷிப்பை நினைச்சா சந்தோஷம்னா இருக்கு.  " என்று பேசிக்கொண்டே
போனார் அவன் அம்மா.


எனக்குள் ஆச்சரியம் ஊற்றாக பிரவாகம் எடுக்க ஆரம்பித்தது.

"இவன் மனசுக்குள் இந்த அளவுக்கு நான் ஆகிரமித்திருக்கிறேனா.?" வியப்புடன் அவனை பார்த்தேன் நான்.

என் பார்வையை
நேருக்கு நேர் எதிர்கொண்ட சாமிநாதன்.  அடுத்தகணம்.  "அம்மா.  எங்களுக்கு
சாப்பிட என்னமா இருக்கு.  மதியம் சாப்டாம வந்து இருக்கோம்." என்றான் அவன்.


"இதோ கொஞ்ச நேரத்துலே தயார் பண்ணிடறேன்."
-என்றவர். "கேக்க மறந்து போயிட்டேன்.  மத்யானம் காலேஜ் லீவா?" என்று கேட்டார்.

"இல்லேமா.  கட் அடிச்சுட்டோம் ." என்றான் சாமிநாதன்.

எனக்கு திக் என்று இருந்தது.  என்ன இவன் இப்படி சொல்கிறானே.  அம்மா என்ன நினைப்பாங்க.  என்னையும் அல்லவா தப்பா நினைப்பாங்க.  

ஆனால் அம்மாவோ அதை சாதரணமாக எடுத்துக்கொண்டு உள்ளே சென்று விட்டார்கள்.

"வாடா ரூமுக்குள்ளே போய் இருப்போம். "   - என்று என்னை அறைக்குள் அழைத்துச் சென்றான் சாமிநாதன்.

"என்னடா இது.  அம்மா கிட்டே இப்படி சொல்லிட்ட?"என்றேன் நான் பதற்றமாக.

"என்ன சொன்னேன். தப்பா எதுவும் சொல்லவில்லையே." என்றான் அவன்.

"காலேஜ் கட் அடிச்சுட்டு வந்து இருக்கோம்னு சொல்லிட்டியே.  அவங்க தப்பா நெனைச்சுக்க மாட்டாங்களா?" என்று கேட்டேன் நான்.

"மாட்டாங்க.
ஏன்னா.. நான் உண்மையைத்தானே சொன்னேன்.  அதுதான் அவங்களுக்கு பிடிக்கும்.
நான் தப்பே செய்தாலும் அதை எங்க அம்மா கிட்டே மறைக்கமாட்டேன்.  அப்படியே
சொல்லிடுவேன். "என்றான் சாமிநாதன்.


அவன் மீது எனக்கு இருந்த மதிப்பு இன்னும் உயர்ந்தது.

அங்கிருந்த ஒரு ஒயர் நாற்காலியில் அமர்ந்தேன் நான்.

சுற்றும்
முற்றும் பார்த்துவிட்டு யாரும் இல்லை என்பதை உறுதிசெய்து கொண்ட சாமிநாதன்
நான் சற்றும் எதிர் பார்க்காத நேரத்தில் சட்டென்று குனிந்து என் முகத்தை
பற்றி திருப்பி என் உதடுகளில் அழுத்தமாக ஒரு முத்தம் இட்டான்.


விக்கித்துப் போனேன் நான்.

(முரட்டுத்தனம் தொடரும்...)

No comments:

Post a Comment