Saturday, September 27, 2014

"பொழுதொரு கனவை விழிகளிலே கொண்டு வருகின்ற வயதல்லவோ.
ஒரு தலைவனை அழைத்து தனியிடம் பார்த்து தருகின்ற மனமல்லவோ." - கவிஞர் கண்ணதாசன்.


ஒரு வழியாக தன்னிலைக்கு திரும்பினான் சுவாமிநாதன்.

ஆனால் அவன் மிகவும் தளர்ந்து போய்விட்டிருந்தான்.

வகுப்பில்
இப்படி அனைவர் முன்னாலும் வலிப்பு வந்து விழுந்துவிட்டிருந்தது அவனை உடல்
ரீதியாக மட்டும் அல்லாமல் மனரீதியாகவும் பாதித்து விட்டிருந்தது.


அது வரை சக மாணவர்களின் நட்பான பார்வையை மட்டுமே சந்தித்திருந்த அவனுக்கு
இப்போது என்னவோ அவர்கள் பார்வையில் அனுதாபமும், இரக்கமும் பரிதாபமும்
புதிதாக தெரிவது போல இருந்திருக்க வேண்டும்.


அதை தவிர்க்க விரும்பினான் அவன்.

"ரமணி.. நான் வீட்டுக்கு போகலாம்னு இருக்கேன். கூட வரியாடா?" என்று என்னிடம் கேட்டான்.


"டேய்.. என்னடா இது .. தேர்தல் நாள்.  வோட்டுப்போட வேண்டாமா?" என்றேன் நான்.


"ஐ
பீல் டயர்ட் டா.  கூட நீ வந்தா நல்லா இருக்கும்னு நெனைக்கறேன்.. 
இல்லையானா நோ ப்ராப்ளம்.  நானே போய்க்கறேன்." என்ற சாமிநாதன் என் பதிலுக்கு
காத்திராமல் டெஸ்க்கின் மீதிருந்த அவனுடைய நோட்டுப்புத்தகத்தை  கையில்
எடுத்துக்கொண்டு வகுப்பறையை விட்டு கிளம்பிவிட்டான்.


 அவனை தனியாக அனுப்ப எனக்கு மனம் வரவில்லை.

ஆகவே யார் என்ன நினைக்கப்போகிறார்கள் என்ற சிந்தனை எதுவும் இல்லாமல் நானும் வகுப்பை விட்டு வெளியேறிவிட்டேன்.

"ஏண்டா வந்தே.?  உனக்கு தேர்தல் தானே முக்கியம்.  போடா போய் அவனுக்கு அடிபணிஞ்சு வோட்டுப்போடு." என்றான் சாமிநாதன்.

"என்னடா இப்படி சொல்லறே.  அப்படி நினைச்சு இருந்தா நான் இப்போ வந்து இருப்பேனா."என்றேன் நான்.

"இதெல்லாம் ஒரு எலெக்சன்.?  அவங்களே போட்டுக்கிட்டு கேப்மாரித்தனம் பண்ணிக்கிட்டு இருப்பாங்க.  அதுக்கு நாம ஏண்டா துணையா இருக்கணும்." என்றான் சாமிநாதன்.

"சாமா.. ஆத்திரப்படாதே.  டென்ஷன் ஆகாதே.. அப்புறம் மறுபடி உனக்கு ஏதாவது ஆயிடப்போகுது?" என்றேன் நான்.

இந்த களேபரத்தில் எனக்கு ராபர்ட்டோ, பிரகாஷோ , ராபர்ட்டின் கட்டளையோ சுத்தமாக மனதில் இல்லை.

என் மனம் முழுக்க என் சாமிநாதனுக்கு இப்படி ஒரு நோயா என்ற கேள்வியும், அவன் மீது கொண்டிருந்த கரிசனமும் மட்டுமே நிறைந்து இருந்தது.

என் கையோடு கை கோர்த்துக்கொண்டான் சாமிநாதன்.

தேர்தல் களேபரங்கள் வியாபித்திருந்த கல்லூரியைத்தாண்டி வெளியே வந்தோம் நாங்கள்.

சிறிது நேரம் மௌனம் மட்டுமே எங்கள் இருவருக்கும் இடையில் நிலவியது.

அதை தவிர்த்து நிலைமையை சுமுகமாக்க விரும்பினேன் நான்.

"என்னடா சாமா.  உனக்கு அடிக்கடி இப்படி வருமா?' என்றேன் நான்.

"ஹ்ம்ம்..  பள்ளிக்கூடத்துலே படிக்கறப்போ நெறைய தரம் வரும்.  டெய்லி விடாம
மாத்திரை சாப்பிடனும்.  வாழ் நாள் முழுக்க.  இது மட்டும் இல்லே ரமணி. 
எனக்கு ஈஸ்னோபோலியா கூட இருக்குடா.  மழையிலே நனைய முடியாது.  மழைகாலம்
குளிர் காலம் எல்லாம் நான் படர அவஸ்தை இருக்கே.  எதிரிக்கு கூட
வரக்கூடாதுடா அது. " என்றான் சாமிநாதன்.


 "ஹேய்.. மனசை தேத்திக்கடா.  நாம எல்லாம் மனுஷங்க.  மனுஷங்களுக்கு வராம
மரம் மட்டைக்காடா டிசீஸ் வரும்.  எல்லாம் சரியா போய்டும் பாரேன். " என்றேன்
நான் ஆறுதலாக.


ஏதோ நினைத்துக்கொண்டவனாக."சாரிடா ரமணி." என்றான் சாமிநாதன்.


"எதுக்குடா திடீர்னு சாரி கேட்டுகிட்டு.." என்றேன் நான் புரியாமல்.



"அதான் அந்த சிவராவ் கிளாஸ்லே உன்னையும் என்னையும் சேர்த்து மட்டமா கமெண்ட்
அடிச்சானே.  அதுக்கு நான் தானே காரணம்.  வெரி சாரிடா." என்றான் சாமிநாதன்.



"போடா லூசு.  அதுக்கெல்லாம் நான் கவலைப்பட மாட்டேன்.   பேசறவன் ஆயிரம்
பேசிட்டு போகட்டும்.  அதை பத்தி நமக்கு என்ன.  லீவ் இட். " என்று சொன்னேனே
தவிர..



மனசுக்குள் சிவராவின் கமெண்ட் மறுபடி வந்து அலை மோதியது.


"பாரு.  உன் பொண்டாட்டி சொல்லறா பாரு. அதை கேட்டுகிட்டு கம்முன்னு அடங்கு"
சாமிநாதனும் நானும் கணவன் மனைவியா..  


எப்படி இப்படி நினைக்க அவர்களுக்கு தோன்றியது.



எது அவர்களை இப்படி நினைக்க வைத்தது.



ஒரு நாள் இருவரில் ஒருவர் வராவிட்டால் அன்று மற்றவர் மனம் தவிக்கிறதே.  அந்த தவிப்பை இருவருமே வெளிப்படையாக காட்டிக்கொண்டு விட்டோமோ.



ஒருவர் சற்று சீக்கிரமே வந்துவிட்டால் அடுத்தவர் வர தாமதம் ஆனால் விழிகள்
வாசலிலேயே அலைபாயுமே.  வாசலில் ஒவ்வொருவர் வரும் போதும் அது அவனாக
இருக்கக்கூடாத என்று தவிப்போமே அந்த தவிப்பை அடுத்தவர் உணரும் படி
வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டுவிட்டோமோ.



அபப்டி அவனோ நானோ வந்துவிட்டோம் என்றால் இருவர் மனசிலும் ஏற்படும்
மகிழ்ச்சியை முகத்தில் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திக்கொண்டு விட்டோமோ..



எது அவர்களை இப்படி நினைக்கத்தூண்டியது.  



நான் எனக்குள் கேள்வியலைகளை எழுப்பிக்கொண்டிருந்தபோது..  



"நீ சுலபமா எடுத்துக்கிட்டே.. இருந்தாலும்.. என் ரமணிக்கு ஒரு அவமானம்
என்றால் அதுவும் என்னால் என்றால் அதை எப்படிடா..." என்று அவன்
முடிப்பதற்குள்
 ..


சட்டென்று வார்த்தைகள் என்னையும் அறியாமல் - என்னையும் மீறி என் வாயிலிருந்து தெறித்துவந்து விழுந்தன.



"போனாப் போறதுடா.  அவங்க உண்மையைத்தானே சொல்லி இருக்காங்க?.  அப்படியே இருந்தா நமக்கு சந்தோசம் தானேடா. "


(முரட்டுத்தனம் தொடரும்...) 

No comments:

Post a Comment